$user_name="Jeyakumar";

Monday, May 01, 2006

சன் டி.வி.க்காக தயாநிதியால் இயக்கப்படும் அமைச்சகம்

இன்றைய தினமணி செய்தி

எஸ்.குருமூர்த்தி

ஒன்று தொலைத் தொடர்பு அமைச்சர்; இன்னொன்று சன் டி.வி. நிறுவனர் (புரொமோட்டர்) என தயாநிதி மாறன் இரண்டு தொப்பிகளை அணிந்து கொண்டிருப்பதாக தொலைத்தொடர்பு உலகம் கருதுகிறது. சில வாரங்களுக்கு முன்னால் வெளியிடப்பட்ட, பொதுமக்களுக்கு பங்குகளை வழங்குதல் தொடர்பான சன் ஆவணம், "தயாநிதி மாறன்' என்பவரை சன் புரொமோட்டர் குழுவைச் சேர்ந்தவராக அறிமுகப்படுத்தி அதோடு நிறுத்தி விட்டது. ஆனால், அவர் தொலைத்தொடர்பு அமைச்சர் என்பதும், அரசாங்கம் என்ற முறையில் லைசென்ஸ்தாரரான சன் நிறுவனத்தைக் கையாள்பவர் என்பதும் மறைக்கப்பட்டுவிட்டது.

புரொமோட்டர் குழு உறுப்பினரான தயாநிதிதான் அமைச்சர் தயாநிதி என்பதை சன் பங்கு வெளியீட்டு ஆவணம் சொல்லத் தயங்கியது ஏன் என்பதற்கான காரணம் தெள்ளத் தெளிவு. இநத இரட்டைப் பாத்திரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சர் என்ற அவரது அரசியல்சட்டரீதியிலான பொறுப்புக்கும், சன் டி.வி.யில் அவருக்குள்ள தொழில் நலனுக்கும் இடையில் இணக்கம் காண முடியாத முரண்பாடு அடங்கியிருக்கிறது.

ஆனால் இந்தக் கலவை தற்செயலானது அல்ல. தெரியாமல் பிரதமர் அவருக்கு தவறான இலாகாவை கொடுத்துவிட்டார் என்பதாலும் அல்ல. கூட்டணி அரசியலில் வால், நாயை ஆட்டும் கதை இது. தயாநிதி மாறனை தொலைத் தொடர்பு அமைச்சர் ஆக்க வேண்டும் என்பது, திமுகவின் கருணாநிதி, மாறன் ஆகிய இரு குடும்பங்களின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கோரிக்கை. இந்தக் கோரிக்கை ஏன் என்பதை தெரிந்து கொள்ள தீர்க்கதரிசி எவரும் தேவையில்லை. சன் டி.வி.க்கு அதை வளர்த்துக் கொள்ள அரசிடம் இருந்து தேவைப்படும் அனைத்தும், அதன் போட்டியாளர்களையும் மற்றவர்களையும் கட்டுப்படுத்தவும் நசுக்கவும் தேவைப்படும் அனைத்தும் தொலைத் தொடர்பு அமைச்சகத்தில்தான் அடங்கி இருக்கிறது. அதாவது, தயாநிதி மாறன் அமைச்சரானால் இவை அனைத்தும் அவரிடம் அடங்கி இருக்கும். சன் டி.வி.யை வளர்ப்பதற்கும், மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்குமான அதிகாரம் செயலற்று இருக்கவில்லை. உண்மையில், அந்த அதிகாரம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. இந்தப் புலனாய்வின் சாரம் அதுதான்.

தயாநிதி மாறன் எப்படி தொலைத் தொடர்பு அமைச்சர் ஆனார் என்பதைப் பின்னோக்கிப் பார்ப்பது, வெளிச்சம் தருவதாக இருக்கும். 2004 மக்களவைத் தேர்தலானது, ஏர்கண்டிஷன் போர்டு அறையில் இருந்து தயாநிதி மாறனை நடுத்தெரு அரசியலுக்கு தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தது. திமுகவில் இருந்து யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும், அவர்களுக்கு என்ன துறைகளைத் தர வேண்டும் என்பது குறித்து, தேர்தலுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி, சோனியாவின் தூதராக வந்த ஜனார்த்தன் ரெட்டி மூலமாக சோனியாவுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ரகசிய ஒப்பந்தத்தில், தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறனின் பெயர் பிரதானமாக இடம் பெற்றிருந்தது.

மத்திய அமைச்சரவை அமைக்கப்படுவதற்கு வெகு நாள்களுக்கு முன்பு நடந்தது இது. இந்த ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் காங்கிரஸுக்கு திமுக ஆதரவு அளித்தது. தொலைத் தொடர்புத் துறையை திமுகவுக்கு தருவது பற்றி, அதுவும் தயாநிதி மாறனுக்குத் தருவது பற்றி காங்கிரஸ் மறுசிந்தனை செய்கிறது என சந்தேகப்பட்டவுடன், அந்த ரகசிய ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தி காங்கிரஸுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தினார் கருணாநிதி. தோஹாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) மாநாட்டில் பங்கேற்று இந்தியா பெருமைப்படும் வகையில் செயல்பட்ட முரசொலி மாறன் வகித்த வர்த்தகத் துறையை அவரது குடும்பத்தினர் கைவிட்டுவிட்டனர். உணர்ச்சிபூர்வமாக பார்த்தால், அவரது துறைதான் வேண்டும் என தயாநிதி வற்புறுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், அரசியலில் அல்லது தொழிலில் உணர்ச்சிக்கு இடமில்லை என்பதை இந்த யதார்த்த மனிதர்கள் அறிந்திருந்தனர். தொழில்நலன் என்ற ஒரே அக்கறையில், கருணாநிதி மற்றும் மாறன் குடும்பத்தினர் வர்த்தகத் துறைக்குப் பதிலாக தொலைத் தொடர்புத் துறையை மாற்றிக் கொண்டனர். 2004 மே மாதம் தயாநிதி தொலைத் தொடர்பு அமைச்சரானார். அதற்கு சில தினங்கள் முன்பு வரையில் அவர் சன் டி.வி.யின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) இருந்தார். புதிய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு அமைச்சகம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள, தயாநிதி மூலமாக அதைக் கட்டுப்படுத்துவது சன் டி.வி.க்கு எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். "ஸ்பெக்ட்ரம்' என்று தொழில்நுட்ப மொழியில் அழைக்கப்படும் ரேடியோ அதிர்வெண் அலைகள் புதிய பொருளாதாரத்தின் சொத்தாகக் கருதப்படுகிறது. இதன் மூலமாகத்தான், செல் போன்களிலும், வானொலியிலும் நாம் கேட்கும் ஒலி அல்லது டி.வி. திரைகளில் நாம் பார்க்கும் காட்சிகள் ஒலி, ஒளிபரப்பாகின்றன. இதைப் பயன்படுத்துவோர் மத்தியில் இதை ஒதுக்கீடு செய்து வினியோகிக்கும் பொறுப்பு தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம்தான் உள்ளது. வயர்லெஸ் உபயோகிப்பாளர்கள் அனைவரும், அது வானொலி நிலையங்கள் ஆனாலும், செல்போன் நிறுவனங்கள் ஆனாலும், டி.வி. ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆனாலும், அதிவேக இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் ஆனாலும், ரேடியோ அதிர்வெண் அலைகளை தயாநிதியின் அமைச்சக ஒதுக்கீட்டில் இருந்துதான் பெற வேண்டும். சுருங்கச் சொன்னால், தயாநிதி அமைச்சகத்திடம் இருந்து லைசென்ஸ் இல்லாமல், வயர்லெஸ்ஸை உபயோகிக்க சட்டத்தில் அனுமதி இல்லை.

தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இணைய தளம் இவ்வாறு கூறுகிறது: ""ஸ்பெக்ட்ரம் நிர்வாகத்துக்கான அதிகார அமைப்பு தொலைத் தொடர்புத் துறையின் (டிஓடி) வயர்லெஸ் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைப்பு (டபிள்யூபிசி) பிரிவைச் சேர்ந்ததாகும். லைசென்ஸ் வழங்குவது உள்பட நாட்டில் உள்ள வயர்லெஸ் உபயோகிப்பாளர்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வது இதுதான்''.

"அரசின் சட்டபூர்வ செயல்பாடுகளை டபிள்யூபிசி செய்கிறது' என்றும் "வயர்லெஸ் நிலையங்களுக்கு' தேவையான "லைசென்ஸுகளை வழங்குகிறது' என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள வயர்லெஸ் அடிப்படையிலான தொழில்கள் அனைத்தும் பயன்படுத்துவதற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான பரிந்துரைகளை ரேடியோ அதிர்வெண் அலைகள் ஒதுக்கீட்டுக்கான நிலை ஆலோசனை கமிட்டி (எஸ்ஏசிஎப்ஏ) செய்கிறது. வயர்லெஸ்ஸால் இயக்கப்படும் இன்றைய நவீன பொருளாதாரத்தில் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு மிக வலுவான சக்தியாக இருக்கிறது.

வயர்லெஸ் லைசென்ஸ் இல்லாமல் கேபிள் டி.வி.க்கள் இயங்க முடியாது. ஏனெனில் டி.வி. நிகழ்ச்சிகள், வயர்லெஸ் மூலமாகத்தான், முதலில் செயற்கைக் கோளுடன் அப்லிங்க் செய்யப்பட்டு பிறகு டவுன்லிங்க் செய்யப்பட்டு கேபிள் மூலமாக வீடுகளுக்கு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

""'டி.வி. தொழில் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரவில்லை; அது செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது'' என்று தயாநிதி மாறனுக்காக பரிந்து பேசுவோர் கூறலாம். இது மிரள வைப்பதற்காக கூறுவதாகும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு, டி.வி. தொழிலில் உண்மையில் ஆணை பிறப்பிப்பவர்கள் யார் என்பதே கேள்வி?

ஸ்பெக்ட்ரம் தொடர்பான பிரச்சினைகளில், செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் ஒரு தபால் ஆபீஸ் மாதிரிதான். டி.வி. ஒளிபரப்பு உள்பட அனைத்து பயன்பாட்டுக்குமான வயர்லெஸ் லைசென்ஸுகள் வழங்குவதை முழுமையாகக் கட்டுப்படுத்துவதும், ஒதுக்கீடு செய்வதும் தயாநிதியின் தொலைத் தொடர்பு அமைச்சகம்தான்.


2வது பகுதி தொடர்ச்சி வரும்.

6 Comments:

At 2:52 PM, Blogger ஜெயக்குமார் said...

இதில் குறிப்பிடப்பட்டுள்ள, தொழில்நுட்பம் தொடர்பான பல விசயங்கள், சென்னையில் தொலைத்தொடர்புத்துறையில் உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றும் என்னுடைய நெருங்கிய உறவினரின் கூற்றுகளோடு ஒத்துப்போகிறது. நேற்று தொலைபேசியில் அவருடன் பேசும்போது, இதே போன்ற கருத்துகள் சிலவற்றை அவரும் கூறினார்.

 
At 4:39 PM, Blogger நந்தன் | Nandhan said...

சற்றும் மனம்தளராம் நீங்கள் ஆற்றிவரும் தொண்டை பாராட்டத்தான் வேண்டும்.
ஆனால் ஒரு கேள்வி நீங்கள் படிக்கும் ஒரு செய்தித்தாளில் கூடவா அம்மாவிற்கு எதிராய் செய்திகள் வருவதில்லை?

 
At 6:59 PM, Anonymous Anonymous said...

Unless you prove that he misused his official position as minister to further the interests of SUN TV
it makes no sense.Technically there is no bar in he becoming
minister.BJP govt. privatised IPCL and sold a major chunk of the share to Reliance.Did they not encourage Reliance to acquire a
monpolist position in petrochemicals.What was this
fraud gurumurthy doing then.
whose boots he was licking then.

 
At 8:11 PM, Anonymous Anonymous said...

இதில் கூறப்பட்டவை பெரும்பாலும் உண்மை. I&B அமைச்சகத்தின் கீழ் வரும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் போன்ற அரசாங்க ஒலி/ஒளி பரப்பாளர்களுக்கு மொத்தமாக அலைவரிசை கற்றை (Band, SACFA (Standing Committee on Frequency Allocation) (இது தொலை தொடர்பு துறையில் இயங்குகிறது) பரிந்துரையின் படி அளிக்கப்படுகிறது. தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் முதலில் Wireless Licence தொலைதொடர்பு இலாகாவிலுருந்து பெறவேண்டும். அதன்பின் frequency பெறவேண்டும். இதையும் தொலைதொடர்பு இலாகாதான் செய்கிறது.

 
At 9:13 PM, Anonymous Anonymous said...

Amma avargal oru thapum pannavilliya

 
At 10:35 PM, Anonymous Anonymous said...

I really dont understand you guys. Jayakumar has clearly mentioned that he is an anti-DMK guy right from the beginning.

So he will continue to post what ever news he gets from the papers.

I think he has made a smart move by moving from DINA-MALAM to a much respected paper.

 

Post a Comment

<< Home